Wednesday, September 26, 2007

இல்லறம்

இல்லறம்
-வ.ஐ.ச.ஜெயபாலன்.

ஆற்றம் கரையில்
இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.

இன்று தெளிந்துபோய்
புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டுத் தொட்டுடச் செல்கிறது அது.
நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்
முளைத் தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பதுபோல.

நேற்றைய துன்பமும் உண்மை
நாளைய பயமோ அதனிலும் உண்மை.
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.

நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.

No comments: