Saturday, October 20, 2007

பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம்.
அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன்


பாலி ஆறு நகர்கிறது
- வ.ஐ.ச.ஜெயபாலன்

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.

1 comment:

sukan said...

பாலியாற்றை நினைவு கூரும் நல்ல கவிதை. உண்மையில் நானறிந்த அமைதியான ஆறு என்று பாலியாற்றை சொல்வேன். தற்போது அவ்விடத்தில் பெரும் வெடியோசைகள். கற்பனை செய்யவே கடினமான விசயம்.